ஞாயிறு, 26 ஜூலை, 2009

சீர் பெருகும் யாழ்ப்பாண நிலமே


தண்டிலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முளவின் ஏங்க
குவளை தன் விழித்து நோக்கி
தெண்டிரை எழினி காட்ட
தேன் பிறை மகர யாழின்
வண்டுகள் இனிது பாட வீற்றிருக்கும்
மாமருதத் தேரே
தருவாயா சில நிமிடம்
கவி ஒன்று நான் படைக்க

யாழை முன் நிறுத்தி பாணத்தை உட்செலுத்தி
தெற்காசிய அதிசயத்தை தன்னக்தே கொண்டிருக்கும்
சங்கிலிய தலைநகரே
இயல் இசை நாடகத்தின் இருப்பிடமே
தென்னைகள் குழல் இசைக்க
பனைகள் பறந்தாட
கிளுவைகள் தலையசைக்கும்
யாழ் மண்ணில் கால் பதித்தால் உடலெல்லாம் கிளுகிளுக்கும்.

வடக்கால போய் பார் நல்லூரான் தெரிந்திடுவார்
தெற்கால போய்பார் சன்னதியான் கூப்பிடுவார்
பாடல் பெற்ற தலங்களிற்கு பஞ்சமில்லை யாழிலே
ஏழரை மணியானால் புத்தக மூட்டையுடன்
பள்ளி தாமரைகள் பளபளவென்று பவனிவரும்
யாழ்மண்ணே கமகமக்கும்.

இதுபோக பகுதிநேர வகுப்பென்று மதிவண்டி நங்கைகள்
மிதந்து வரும் காட்சிகளை
பொறுக்காத ஆடவர்கள்
அக்கறை நிமித்தத்தில்
வீடு சென்று வழியனுப்பும்
காட்சிகள் ஒவ்வொன்றும் விநோதம்.

தையில பொங்கல் முதல்
மார்கழி நத்தார் வரை
தினம்தோறும் கொண்டாட்டம் தான்
முக்கால திரும்பி போனால்
சுன்னாகம் மல்லாகம் தான்
வட்டார வழக்கு தமிழ்
நிக்காமல் மணம்பரப்பும்

மௌன மலர்களே


மௌன மலர்களே
மலர்களே மலர்களே
பலவண்ணம் உடைய புதுப்பொலிவுப் புஸ்ப்பங்களே
குறுகிய வாழ்க்கையில்
கோலாகலம் கொண்டவரே

இரவில் மலரும் மல்லிகையே
பகலில் மலர மாட்டாயா-ஏன்
ஆடவர்களை கண்டு அச்சமா
அல்லது நாணத்தின் உச்சமா
கணவனுக்காக காத்திருக்கும் சூரியகாந்தியே
கர்ப்புக்கு இலக்கணம் நீதானோ
அனைவரையும் கவரும் ஆனந்ந ரோஜாவே-உன்
அந்தரங்கத்தை காப்பதற்காகவா
நீ போட்டது முள்.

தேனை நுகர வரும் தேனியை
எப்படி நீ கவர்ந்தாய்
உன் சிரிப்பிலா
உன் சினேகத்திலா
அல்லது மௌனத்திலா
மாருதத்தில் கலந்து மணம் வீசும் மலர்களே
என்னவொரு தனித்தன்மை உங்கள் இதழ்களில்
நீங்கள் கறுப்பாக பிறக்காத காரணத்தை கண்டுகொண்டேன்
சோகத்திலும் சிரிக்கிறீர்களே
இன்பத்தை அள்ளி தெளிக்கிறீர்களே